fishermen returning their home land one by one

ஓக்ஹி புயல் தாக்கிய போது கடலில் சிக்கி மாயமான மீனவர்கள் 27 பேர் இன்று கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப் பட்டினத்துக்கு வந்தனர். வேதாரண்யம் மீனவர்கள் 4 பேரும் கரை திரும்பி உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரைச் சேர்ந்த 8 மீனவர்கள் உள்பட அசாம், கேரளா, ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகையைச் சேர்ந்த 27 பேர் இரண்டு விசைப்படகுகளில் குஜராத் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஓக்ஹி புயல் தாக்கியது. இதனால் இவர்களது படகு மகாராஷ்டிரா, கோவா கடல் பகுதிகளுக்கு திசை மாறிச் சென்றது. தொலைதொடர்பு இல்லாத நிலையில் பல நாட்கள் கடலிலேயே தத்தளித்த மீனவர்கள், இன்று கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் வந்தடைந்தனர். அவர்களை துறைமுகம் சென்று உறவினர்கள் வரவேற்றனர்.

ஓக்ஹி புயலின் போது திசைமாறிய கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகையைச் சேர்ந்த 45 மீனவர்கள் லட்சத்தீவின் கவரொட்டி பகுதியில் கரை ஒதுங்கினர். இந்நிலையில், அவர்கள் படகு மூலம் கொச்சி வந்தடைந்தனர். அங்கு தமிழக அதிகாரிகள் தலா ரூ.2,500 நிவாரண தொகையை வழங்கினர். அதேபோல், வேதாரண்யம் மீனவர்கள் 4 பேரும் கரை திரும்பி உள்ளனர். புயலின்போது மாயமான சீர்காழி மீனவர்கள் 4 பேரும் இன்று சொந்த ஊருக்குத் திரும்பினர். தொடுவாயைச் சேர்ந்த கலைச்சந்திரன், மாயவன், விஜயநாதன், வெள்ளக்கோவில் பார்த்திபன் ஆகியோர் சீர்காழி திரும்பினர்.

புயலின் காரணத்தால், திசை திரும்பிச் சென்று கடலில் அலைக்கழிக்கப் பட்டு தகவல் தொடர்பு இன்றி உறவினர்களால் தேடப்பட்டு வந்த மீனவர்கள் ஒவ்வொருவராக கரைதிரும்பி வருகின்றனர்.