fishermen refused to return from protest
தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொள்ளப்பட்டதையடுத்து 6 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக சிலர் வதந்தியை பரப்புகின்றனர் என போராட்ட குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ என்பவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரட்ஜோவின் உடலை வாங்க மறுத்து தங்கச்சிமட மீனவர்கள் தொடர்ந்து 6-வது நாளாக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மீனவர்களை மத்திய மாநில அமைச்சர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வந்தனர். அதன் வரிசையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் இன்று தங்கச்சிமடம் சென்று பிரிட்ஜோவின் தாயாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதையடுத்து நிர்மலா சீதாராமன் மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்திய மீனவரை சுட்டுக் கொன்றவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

இந்நிலையில், பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை மீனவர்கள் வாபஸ் பெறுவதாக தகவல் வெளியானது.
போராட்டத்தை வாபஸ் பெறுவது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும், போராட்டம் வாபஸ் பெறுவதாக வந்த தகவல் வதந்தி எனவும் மீனவ சங்க தலைவர் எமரால்டு தெரிவித்துள்ளார்.
மீனவர்களின் போராட்டத்தை திசை திருப்ப முயற்சிகள் நடைபெறுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
