fishermen attack

இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்…மீனவர்களை தாக்கி பிடித்துச் சென்ற அவலம்…

நெடுந்தீவு அருகே இந்திய எல்லைப்பகுதிக்குள் மீன் பிடித்துச் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கற்கள், பாட்டில்கள் மற்றும் இரும்பு ராடுகள் போன்றவற்றை எறிந்து தாக்குதல் நடத்தியதோடு, 12 மீனவர்களையும் 2 படகுகளையும் பிடித்துச் சென்றனர்.

அண்மையில் ஆதம்பாலம் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொன்றனர். தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வால் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் டெல்லி சென்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து பேசினர். அப்போது இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சுஷ்மா, இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இந்நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 150 படகுகளில் நேற்று நெடுந்தீவு அருகே இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் கற்கள், பாட்டில்கள் மற்றும் இரும்பு ராடுகள் போன்றவற்றைக் கொண்டு மீனவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

இதனால் அச்சமடைந்த மீனவர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பி ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர். ஆனால் கடைசியில் வந்த இரண்டு படகுகளில் வந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர்.

அவர்கள் காங்கேசன்துறை சிறைளியில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை கடற்படையினரின் நடத்தி வரும் இதுபோன்ற அட்டூழியம் எப்போது நிற்கும் என மீனவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.