அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்... மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை!
இலங்கைக்கு அருகே உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால், தமிழகத்துக்கு புயல் ஆபத்து இல்லை என்றாலும், அடுத்த இரு நாட்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என்று மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழகத்துக்கு புயல் ஆபத்து உண்டா என்பதற்கு, அது இலங்கையைக் கடந்து வர வேண்டும். ஆனால், புயல் ஆபத்து இல்லை என்று கூறினார் வானிலை ஆய்வு மைய இயக்குனர்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன். அவர், நேற்று தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நவம்பர் 29ம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே 500 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருக்கிறது. இது வட திசையை நோக்கி நகர்ந்து இலங்கையைக் கடந்து தென் தமிழகத்துக்கு அருகே வரும்.
இதனால், அடுத்து வரும் 2 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்யும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை வாய்ப்பு உள்ளது. அதாவது, தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் உடன் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும்.
கடற்பகுதிகளில் காற்று பலமாக இருக்கும். குறிப்பாக தென் தமிழக கடற்கரைப் பகுதிகளான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள கடற் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே இப்பகுதி மீனவர்கள், அடுத்த இரு நாட்களுக்கு (நவ.29 & நவ.30) கடற்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்து வரும் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழகத்துக்கு புயல் ஆபத்து இல்லை. அது இலங்கையைக் கடந்து வர வேண்டும். பிறகுதான் தெரியும். என்று கூறினார்.