சென்னை தி.நகர் சரவணா ஸ்டோர்சில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

சென்னை தி.நகர் நடேசன் சாலையில் சரவணா செல்வரத்தினம் அங்காடி உள்ளது. இங்கு வீட்டுக்கு தேவையான பொருட்கள், ஜவுளி, செருப்பு, நகை, உணவகம் உள்பட பல்வேறு வியாபாரங்கள் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், நேற்று காலை இந்த கட்டிடத்தில் அமைந்தள்ள உணவகத்தில், சமையலுக்காக வைக்கப்பட்டு இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதனால், அப்பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதை கண்டதும், அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர்.

இச்சம்வத்தில் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் ஒனித் சர்க்கார் (20), இலியாஸ் அகமது (18), இப்ரகீம் அலி (22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் தீயில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்கள் 4 பேரையும், கடை ஊழியர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையில் தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சிஐடி நகர் தீயணைப்பு நிலையத்தில் வீரர்கள் விரைந்து சென்றனர். ஆனால், அதற்குள் பொதுமக்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.

இதுதொடர்பாக மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.