மீன்வள பல்கலைக்கழகத்தில் நள்ளிரவில் தீ விபத்து; முக்கிய ஆவணங்கள், பல இலட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்...
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மீன்வள பல்கலைக்கழகத்தில் நள்ளிரவில் திடிரென ஏற்பட்ட தீ விபத்தில் நவீன ஆய்வகம், முக்கிய ஆவணங்கள் மற்றும் பல இலட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்து வழக்குப் பதிந்து காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், இரண்டாவது கடற்கரை சாலையில் மீன்வள பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகம் தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்ப் பல்கலைக்கழகத்துக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டது. மேலும், இந்த பல்கலைக்கழகத்துக்காக நாகூர் அருகே பனங்குடி கிராமத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இதில் ஒரு பகுதி கட்டிட வேலைகள் முடிவுற்ற நிலையில் பல்கலைக்கழகத்தில் சில வகுப்புகள் புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. எனினும், ஆய்வகம், துணைவேந்தர் மற்றும் பதிவாளர் அலுவலகங்கள் 2-வது கடற்கரை சாலையில் உள்ள பழைய பல்கலைக்கழக கட்டடத்திலேயே இயங்கி வருகிறது.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல அதிகாரிகள் அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இரவு காவலர்கள் மட்டும் பணியில் இருந்துள்ளனர். இந்த நிலையில் நள்ளிரவில் பல்கலைக்கழகத்தின் தரை தளத்தில் இயங்கி வரும் அதிநவீன ஆய்வகம் மற்றும் பேராசிரியர்கள் அறை உள்பட மூன்று அறைகளில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
பின்னர் இந்த தீ கொளுந்துவிட்டு எரிய தொடங்கியதைக் கண்ட காவலாளிகள் உடனடியாக நாகை தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் அறைகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் நவீன ஆய்வகம் மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாயின. இதில் நவீன ஆய்வகத்தில் இருந்த பல இலட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து நாகை நகர காவலாளர்கள் வழக்குப்பதிந்து தீ விபத்துக்கு மின் கசிவு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்று விசாரித்து வருகின்றனர்.