”வழக்கு போட்டால் விசாரணைக்கு தயார்” - ஒபிஎஸ் பதிலடி...
சேகர் ரெட்டி விவகாரத்தில் வழக்கு தொடுத்தால் சந்திக்க தயார் என முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைவதற்காக இருதரப்பிலும் குழு அமைக்கப்பட்டன. ஆனால் ஒபிஎஸ் குழு அறிவித்த இரண்டு கோரிக்கைகளை எடப்பாடி தரப்பு செய்ய மறுப்பு தெரிவிக்கவே இதுவரை இணையாமல் பிரிந்து நிற்கிறது.
இதனிடையே பேசிய முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், தமிழக அரசு என்றாலே ஊழல் அரசுதான் என்று மக்கள் கருதுகிறார்கள் என தெரிவித்தார்.
மேலும் இரு அணிகள் இணைப்பு என்பது சாத்தியமில்லை என்றும் அமைச்சர்கள் மட்டுமே இணைப்பு குறித்து பேசி வருகிறார்கள் என ஓபிஎஸ் கலாய்த்தார்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ஊழல் குறித்து பேசுவதற்கு ஓபிஎஸ்க்கு எந்த உரிமையும் இல்லை என தெரிவித்தார்.
ஊழல் குறித்து பேசுவதற்கு முன் ஓபிஎஸ், சேகர் ரெட்டிக்கு பதில் சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பினார்.
சேகர் ரெட்டி யார்? அவருக்கும் ஓபிஎஸ்க்கும் என்ன தொடர்பு என கூறிய சி.வி.சண்முகம், தமிழகத்துக்கு சேகர் ரெட்டியை தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்ததே ஓபிஎஸ் தான் என குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் சேகர் ரெட்டி விவகாரத்தில் வழக்கு தொடுத்தால் சந்திக்க தயார் என தெரிவித்தார்.
மேலும் சேகர் ரெட்டியுடன் பேசியது ஒரு குற்றமா என கேள்வி எழுப்பினார்.