உதகையில் நடக்கயிருந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் தேதி ஐந்தாவது முறையாக மாற்றம்; அதுக்கு சொன்னாங்க பாருங்க ஒரு காராணம்…
நீலகிரி
உதகையில் நடைபெறுவதாக இருந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் தேதி ஐந்தாவது முறையாக மாற்றப்பட்டு உள்ளது. “அரசுக் கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் பங்கேற்றால் அடுத்தமுறை இந்த இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வராக பங்கேற்க மாட்டாராம்” அப்படி ஒரு நம்பிக்கை நிலவுதுனு அதிமுக தரப்பிலிருந்து காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அனைத்து மாவட்டங்களிலும் வெகு சிறப்பாக அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் இந்த விழா செப்டம்பர் 11-ஆம் தேதி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், மாவட்டத்தில் அப்போது நிலவிய பருவநிலையின் காரணமாக இவ்விழா செப்டம்பர் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் நிர்வாக வசதிக்காக செப்டம்பர் 27-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனால், தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களின் காரணமாக இவ்விழா அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும் என்று 4-வது முறையாக அறிவிக்கப்பட்டது. அதோட் இவ்விழா நடைபெற இருந்த உதகை குதிரைப் பந்தய மைதானத்துக்குப் பதிலாக அரசு கலைக் கல்லூரி மைதானத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனிகிடையே அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் பங்கேற்றால் அடுத்தமுறை இந்த இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியின்போது முதல்வராக பங்கேற்க மாட்டார் என்ற நம்பிக்கை நிலவுவதால் நீலகிரி மாவட்ட அதிமுக தரப்பிலிருந்து ஆட்சியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறுமென மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாவது முறையாக மாற்றப்பட்டுள்ள இவ்விழா தேதி குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உதகையில் அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறவிருந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள், நிர்வாகக் காரணங்களுக்காக டிசம்பர் 7-ஆம் தேதி உதகையில் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
விழா நடைபெறும் இடம் குறித்து அவர் ஏதும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.