வறட்சிக்குப் பலியான பெண் விவசாயி...
நாகையில் கருகிய பயிரைக் கண்டு பெண் விவசாயி மாரடைப்பால் மரணம் அடைந்து வறட்சிக்கு பலியானார்.
தமிழகத்தில் 60 சதவீதம் மழை பொய்த்துப் போனதால் டெல்டா மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது.
காவிரி தண்ணீர் கிடைக்காததாலும் விவசாயிகள் தங்களது விளை நிலங்கள் கருகுவதை காண முடியாமல் தவிக்கின்றனர்.
ஆங்காங்கே தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி திருச்சியில் நேற்று எலிக்கறி உண்ணும் போராட்டமும் நடைப்பெற்றது.
ஒருபுறம் போராட்டங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருக்க, மறுபுறம் கருகிய பயிர்களைக் கண்டு மனமுடைந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. சில விவசாயிகள் மாரடைப்பால் மரணம் அடைகின்றனர்.
நாகை மாவட்டம், கடம்பரவாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி சரோஜா. இவர் தனது நிலத்தில் சம்பா பயிரை பயிரிட்டு இருந்தார். தண்ணீரின்றி கருகிய சம்பா பயிரைக் கண்டு மன உலைச்சல் அடைந்தார் சரோஜா.
இதனால், மன இறுக்கம் ஏற்பட்டது மிகுந்த சோகத்துடனே இருந்துள்ளார். இதன் விளைவாக இன்று வீட்டில் இருந்தபோது சரோஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், சம்பவ இடத்திலேயே சரோஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகத்தில் விவசாயிகள் இறப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், ஆளும் அதிமுகவோ தமிழக விவசாயிகளையோ, தமிழக மக்களையோ பற்றி சிறிதும் கவலைப்படாமல் கட்சி பொதுக்குழு கூட்டம், பொதுச் செயலாளர் தேர்ந்தெடுப்பு என மிகவும் இடையறாது உழைக்கின்றனர்.
இதில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை விவசாயிகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்துள்ளனர்.
இப்படியே விவசாயிகள் இறப்பு தொடர்ந்தால், விவசாயிகள் தினம் கொண்டாட அதிமுக உறுப்பினர்கள் இருப்பார்கள். ஆனால், விவசாயிகள் இருக்க மாட்டார்கள்…