Female defense with karate training life skill development training

விருதுநகர்

விருதுநகரில், குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள பெண் குழந்தைகளுக்கு தங்களை பாதுகாத்துக் கொள்ள கராத்தே பயிற்சியுடன் கூடிய வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைப்பெற்றது.

அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கீழ் செயல்படும் குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள பெண் குழந்தைகளுக்கான வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சி திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி திருசுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி நரசிம்மன் தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசியது:

“மாநில அரசின் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாதுகாத்தல், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுத்தல், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளித்தல், குழந்தைகள் இல்லங்களை கண்காணித்தல் மற்றும் ஆய்வு செய்தல் போன்ற பணிகளை செய்கிறது.

அதுமட்டுமல்லாமல் பிற அரசுத் துறையினருடன் சேர்ந்து குழந்தைகள் நலன் காக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கீழ் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள், அங்கு தங்கியுள்ள குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இந்த பயிற்சியின் மூலம் இல்ல குழந்தைகள் அனைவரும் வாழ்வியல் திறன்களை கற்று தங்களின் எதிர்கால வாழ்க்கையினை சிறப்பாக அமைத்து கொள்ள வேண்டும்” என்று அவர் பேசினார்.

மதுரை செல்லமுத்து அறக்கட்டளை திட்ட இயக்குனர் ஜனார்த்தனன் பாபு, திருசுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விருதுநகர் புடோரியா கராத்தே பயிற்சி பள்ளி தற்காப்பு கலை ஆசிரியர் ஜெயபால், வளர் இளம்பெண்களுக்கு தேவையான கராத்தே பயிற்சிகளை செயல்முறை விளக்கமாகவும், குறும்படங்களின் மூலமாகவும் எடுத்துரைத்தார்.

குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்து பாதுகாப்பு அலுவலர் திருப்பதி, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்து ராஜேஸ் விமல்தாஸ், குழந்தைகள் நலன்காக்கும் சட்டங்கள் குறித்து கார்த்திகைராஜன் ஆகியோர் பேசினர்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள் சோலைச்செல்வி, சாந்தி, குழந்தைகள் இல்ல நிர்வாகிகள் மற்றும் குழந்தைகள் இல்லங்களை சேர்ந்த ஏராளமான பெண் குழந்தைகள் கலந்து கொண்டனர்.