மகன் பண மோசடியில் ஈடுபட்டதால் தந்தையின் போலீஸ் வேலை பறிப்பு; ஓய்வுபெற ஒரு மாதமே இக்கும் நிலையில் பணி நீக்கம்...
அரியலூர்
அரியலூரில், செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருவதாக கூறி மோசடி வழக்கில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் மகன் ஈடுபட்டதால் காவல் உதவி ஆய்வாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பை மோடி வெளியிட்டார். மேலும், ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து விதிகளுக்குட்பட்டு பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
அந்த சமயத்தில் அரியலூரில் உள்ள ஒரு விடுதியில் கருப்பு பணத்தை மாற்றித் தருவதாக கூறி தஞ்சையை சேர்ந்த துணிக்கடை வியாபாரியிடம் பேரம் பேசிய ஒரு கும்பல், ரூ.34 இலட்சத்தை மாற்றி தருவதாக கூறி பணத்தை வாங்கிக்கொண்டு தப்பிவிட்டது.
இந்தச் சம்பவத்தில் அரியலூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிய சேகர் என்பவரின் மகனுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சேகர் அதிரடியாக செந்துறை காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து அரியலூர் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி சிலரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் அரியலூர் மாவட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சேகரின் மகனுக்கும் தொடர்பு இருந்தது அம்பலமானது.
இது தொடர்பாக காவலாளர்கள் உயரதிகாரிகள் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் முடிவில் அந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சேகரின் மகனுக்கு பணம் மாற்று விவகாரத்தில் தொடர்பிருந்தது உறுதியானது.
இதனையடுத்து அதிரடியாக நேற்று முன்தினம் இரவு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ்குமார், சேகரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சேகர் வருகிற மே மாதம் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிட்டத்தக்கது.