மத்திய அரசுக்கு நல்ல புத்தியை தருமாறு சிவனிடம் அங்கப்பிரதட்சனம் செய்து வேண்டிக் கொண்ட விவசாயிகள்...
திருநெல்வேலி
திருநெல்வேலியில், மத்திய அரசுக்கு நல்ல சிந்தனையை தருமாறு சிவனிடம் முழக்கங்களை எழுப்பி வேண்டி விவசாயிகள் அங்கப்பிரதட்சனம் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் சங்கர நாராயணசுவாமி கோவில் முன்பு நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் அங்கபிரதட்சணம் செய்தனர். இந்த நூதனப் போராட்டத்திற்கு விவசாய சங்க தலைவர் ஐயாக்கண்ணு தலைமைத் தாங்கினார்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் ஐயாக்கண்ணு மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள், விவசாயிகள் அடங்கிய குழுவினர், "மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவேண்டும்,
மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்ய வேண்டும்,
விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
விவசாயிகள் விளைவிக்கும் உணவு பொருள்களை அரசே நியாயமான விலைக்கு வாங்கி ஏழை மக்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1-ஆம் தேதி முதல் கன்னியாகுமரியில் இருந்து சென்னை கோட்டை நோக்கி விழிப்புணர்வு பிரசார பயணத்தை தொடங்கினர்.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் 5–ஆம் நாளான நேற்று முன்தினம் இரவு அவர்கள் சங்கரன்கோவில் வந்து தங்கினர்.
நேற்று காலை சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் ஐயாக்கண்ணு மற்றும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசுக்கு நல்ல சிந்தனையை தருமாறு சிவனிடம் வேண்டி முழக்கங்களை எழுப்பியவாறு அங்கப்பிரதட்சனம் செய்தனர்.
இதனால் கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை முன்னிட்டு கோவிலில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.