பயிர் காப்பீடு தொகை கேட்டு கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் - எழும்பும் ஆதரவு குரல்கள்...
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் வழங்கப்படாமல் உள்ள பயிர்க்காப்பீட்டுத் தொகையை கேட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், செம்பனார்கோவில் அருகே காலமநல்லூர் ஊராட்சியில் சுமார் 400 விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தியும் தற்போதுவரை பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று ஆக்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க. மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ஜெனார்த்தனம், தி.மு.க. ஒன்றியத் துணைச் செயலாளர் சிவக்குமார், தமிழ்நாடு விவசாய சங்கப் பொறுப்பாளர் சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், “உடனே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், ஆய்வாளர் முருகவேல், தாசில்தார் முருகேசன், கூட்டுறவு இணை பதிவாளர் சரவணகோபால், காப்பீட்டு நிறுவன அதிகாரி தினேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அந்த பேச்சுவார்த்தையில், “இந்த மாத இறுதிக்குள் பயிர்க்காப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும்” என்று அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.