பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பண்ணை தொழிலாளர்கள் போராட்டம்...
கோயம்புத்தூர்
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழக பண்ணை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்தில் பண்ணைகளில் தினக் கூலி அடிப்படையில் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள், "தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என்று பல்கலைக்கழக நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். ஆனால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழக நிர்வாக வளாகத்தில் நேற்று காலை 8 மணியளவில் பண்ணை தொழிலாளர்கள் அமர்ந்து திடீரென்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இது குறித்து பண்ணை தொழிலாளர்கள் சங்க தலைவர் சுரேஷ்குமார், "கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலிகளாக வேலை பார்த்து வருகிறோம்.
எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
காலியாக உள்ள பணியிடங்களில் தகுதி வாய்ந்த தினக்கூலிகளையே நேர்காணல் மூலம் நிரப்ப வேண்டும்.
தினக்கூலி மற்றும் தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணியாற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பிடித்தம் செய்த சம்பளத்தொகையை உடனே வழங்க வேண்டும்.
இறந்துபோன தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை தர வேண்டும்.
அனைத்து தினக்கூலி தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும்.
வாரத்தில் குறைந்தது 5 நாட்கள் வேலை வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வேளாண் பல்கலைக் கழகத்தில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்" என்று அவர் கூறினார்.
இதையடுத்து மதியம் 1.30 மணியளவில் பண்ணை தொழிலாளர்கள் சங்க தலைவர் சுரேஷ்குமாரை, பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ. செல்போனில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அதிகாரிகள், "பண்ணை தொழிலாளர்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் மற்றும் வேளாண் துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதி அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து பண்ணை தொழிலாளர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.