செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புகொள்ள கூறி விவசாயிக்கு அடி; தவறிழைத்த போலீஸ் ஆய்வாளருக்கு 6 மாதம் சிறை...
இராமநாதபுரம்
செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொள்ள வலியுறுத்தி விசாரணையின்போது விவசாயியை காட்டுத்தனமாக அடித்த காவல் ஆய்வாளருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனையை விதித்து இராமநாதபுரம் நீதிமன்றம் அதிரடி சரவெடி தீர்ப்பு வழங்கியது.
இராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில், மேல்மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இவருடைய மனைவி ஜெயராணி.
கடந்த 2005–ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20–ஆம் தேதி ஜெயராணியின் நகை திருடுபோனது. இது தொடர்பாக ஜெயராணி நயினார்கோவில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குபதிந்து காவலாளர்கள் விசாரணை செய்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்காக ஜெயராணியின் வீட்டின் அருகில் வசித்து வந்த விவசாயி கணேசன் என்பவரை நயினார்கோவில் காவல் ஆய்வாளராக அப்போது பணியாற்றிய கண்ணன் என்பவர் அழைத்துச் சென்றார்.
விசாரணையின்போது ஆய்வாளர் கண்ணன், கணேசனை குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி வற்புறுத்தி சரமாரியாக அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த கணேசன் திருவாடானை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் திருடுபோன நகை ஜெயராணியின் வீட்டின் கதவின் பின்னால் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தன் மீது பொய்யாக பழிப்போட்டும், என்னை அடித்தும், திருடியதாக ஒப்புக்கொள்ள வற்புறுத்தியதாகவும் கன்னன் மீது கணேசன் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் பரமக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகசாமி ஆய்வாளர் கண்ணனிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் ஆய்வாளர் கண்ணன் குற்றம் புரிந்தது உறுதியானது.
இந்த வழக்கு விசாரணை இராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் வழக்கினை விசாரித்த நீதிபதி இசக்கியப்பன், காவல் ஆய்வாளர் கண்ணனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட ஆய்வாளர் கண்ணன் இந்த தண்டனையை எதிர்த்து இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கயல்விழி ஏற்கனவே நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனையை உறுதிசெய்யும் வகையில் ஆறு மாதம் சிறைத் தண்டனை வழங்கியதோடு அபராதத்தை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி அதிரடி தீர்ப்பு வழங்கினார்.