Extra charge of 24 buses instead of government orders Employees Union condemned
விருதுநகர்
அரசு உத்தரவுக்கு மாறாக 24 பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது அரசு ஊழியர் சங்கம்.
அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், "தமிழக அரசின் உத்தரவுக்கு மாறாக விருதுநகர் மாவட்டத்தில் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று புகார் செய்தோம்,
அது தொடர்பாக கடந்த மாதம் 2-ஆம் தேதி விருதுநகர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விருதுநகர், சிவகாசி, திருவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களில் உள்ள மூன்று வட்டார போக்குவரத்து அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
அந்த பேச்சுவார்த்தையின் கூட்ட குறிப்பு எங்கள் சங்கத்திற்கு வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் சிட்டி விரைவு, எல்.எஸ்.எஸ். பேருந்துகளை இயக்க வட்டார போக்குவரத்து அலுவலகம் எவ்வித அனுமதியும் வழங்கவில்லை என்றும், இந்த பேருந்துகள் 2 நாட்கள் நிறுத்தப்பட்டுவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அரசு உத்தரவுப்படி மாவட்டத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் வசூலிக்க ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
பேச்சுவார்த்தை முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் அதிகாரிகள் ஒத்துக்கொண்டபடி எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு உத்தரவுக்கு மாறாக 24 பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டது என போக்குவரத்து துணை ஆணையர் ஒத்துக்கொண்ட போதிலும் அந்த பேருந்துகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு எங்கள் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று அவர்கள் கூறியுள்ளனர்.
