தங்கத் தாலிக்கு ஜி.எஸ்.டி-யிலிருந்து விலக்கு - மத்திய அரசுக்கு நகை வியாபாரிகள் சம்மேளனம் கோரிக்கை...
நாமக்கல்
மத்திய அரசு ஜி.எஸ்.டி-யிலிருந்து தங்கத் தாலி மற்றும் வெள்ளிக்கொடி, வெள்ளிக்கொலுசு, வெள்ளி மெட்டி ஆகியவற்றுக்கு விலக்கு அளித்து கலாசாரத்தை காக்க வேண்டும் என்று தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைரம் நகை வியாபாரிகள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைரம் நகை வியாபாரிகள் சம்மேளனத்தின் 6-வது நிர்வாகக் குழுக் கூட்டம் நாமக்கல்லில் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு சங்கத் துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமைத் தாங்கினார். நாமக்கல் நகர ஷராப் மற்றும் நகை வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் எம்.எஸ். சிவஞானம் வரவேற்றார். தலைவர் டி.சிவஞானம் முன்னிலை வகித்தார். சம்மேளனத்தின் வரவு, செலவு கணக்குகளை பொருளாளர் மோகனசுந்தரம் தாக்கல் செய்தார்.
இந்தக் கூட்டத்தில், சம்மேளன செயலர் லோகநாதன், மேலாளர் லட்சுமி நாராயணன், நாமக்கல் நகர ஷராப் மற்றும் நகை வியாபாரிகள் சங்கச் செயலர் கருமலை, பொருளாளர் பாலாஜி, இணைச் செயலர்கள் ராம சீனிவாசன், சுரேஷ் குமார்,
முன்னாள் நகர்மன்ற தலைவர் து.சு.மணியன், நாமக்கல் மாவட்ட வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் பெரியசாமி, ஓய்வுபெற்ற கலால்துறை அதிகாரி மனோகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
இதில், "மத்திய அரசு ஜிஎஸ்டியிலிருந்து தங்கத் தாலி மற்றும் வெள்ளிக்கொடி, வெள்ளிக்கொலுசு, வெள்ளி மெட்டி ஆகியவற்றுக்கு விலக்கு அளித்து கலாசாரத்தை காக்க வேண்டும்.
மத்திய அரசு கொண்டு வருவதாக இருக்கும் தங்கம் மேம்பாட்டுத் திட்டத்தில் தங்க வியாபாரிகளுக்கும், தங்க ஆபரண தயாரிப்பாளர்களுக்கும் சிரமம் இல்லாத சலுகைகள் அடங்கிய திட்டங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
மத்திய அரசு சீட்டுக்கள் பிடிப்பது சம்பந்தமாக கொண்டுவர உள்ள சட்டத் திருத்தத்தில் நகைக்கடை மற்றும் நகை வியாபாரிகள், தொழிலாளர்கள் பாதிக்காத முறையில் இருக்க வேண்டும்" போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.