"குற்றவாளிகள் கட்சியில் பதவி வகிக்க கூடாது" - முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் வலியுறுத்தல்
குற்றவாளிகளுக்கு வாக்களிக்க உரிமையில்லை. அவர்கள் கட்சிகளில் பதவியும் வகிக்க கூடாது என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கிருஷ்ண மூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வழக்குகளில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் வாக்களிக்க முடியாது. அதே நேரத்தில் கட்சி பதவிகளில் தொடர முடியும் என்கிற நிலை உள்ளது.
நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விலக்கபடுவதாகவும், வாக்களிக்க தகுதி இல்லாதவர் ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக இருக்க கூடாது எனவும், எனவே சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.சி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் நேற்று மனு அளித்துள்ளார்.
மேலும், 4 வாரத்திற்குள் தேர்தல் ஆணையம் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் எனவும் கே.சி.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
அரசியல் சாசன 11A மற்றும் மக்கள் பிரதிநித்துவ சட்டம் 65- பிரிவின்படி, குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நபர் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் வாக்களிக்க முடியாது.
அதே நேரத்தில் அவர்களுக்கு கட்சிகளில் பதவிகள் வகிக்க தடை இல்லை. இருப்பினும் இத்தகைய குற்றவாளிகள் கட்சிகளில் பதவி வகிக்கவும் தடை விதிக்க சட்டம் கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.