திண்டுக்கல்,
முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்ததால், மாவட்டம் முழுவதும் மௌன ஊர்வலம் சென்றும், கண்ணீர் விட்டு கதறி அழுதும் அதிமுக தொண்டர்களும், பெண்களும், பாமர மக்களும் முதல்வர் மீதான தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் இயற்கை எய்தினார். இதையொட்டி அ.தி.மு.க. தொண்டர்களும், தமிழக மக்களும் சோகத்தில் மூழ்கினர். திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் ஆங்காங்கே ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் அரை கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் படத்துக்கு ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சலி செலுத்தினர். திண்டுக்கல் நகரில் பல்வேறு தெருக்களில் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவியும், மாலை அணிவித்தும் பொதுமக்கள் மரியாதை செய்தனர்.
திண்டுக்கல் எம்.ஜி.ஆர். சிலை அருகே வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். ஜெயலலிதா மரணம் அடைந்ததையொட்டி முத்தழகுப்பட்டியை சேர்ந்த அருள்சாமி (40), பிள்ளையார்நத்தம் சிவமாணிக்கம் (30) ஆகியோர் எம்.ஜி.ஆர். சிலை முன்பு மொட்டை அடித்துக்கொண்டனர்.
இதே போல, நொச்சியோடைப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் மவுன ஊர்வலம் சென்றனர். அந்த ஊரை சேர்ந்த 10–க்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்தனர்.
திண்டுக்கல் 4–வது வார்டு முன்னாள் கவுன்சிலர் சோனா சுருளிவேல் தலைமையில், அந்த வார்டு பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.வினர் ஆர்.எம்.காலனி 7–வது கிராசில் இருந்து மவுன ஊர்வலம் சென்றனர். அதன்பிறகு, அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா படத்துக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அப்போது சில பெண்கள் கதறி அழுதனர்.
மேட்டுப்பட்டியில் அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் துளசிராம், சேசு ஆகியோர் தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது. இதிலும் ஏராளமானோர் பங்கேற்றனர். இதைத்தவிர, திண்டுக்கல் லயன்ஸ் தெரு, பாறைப்பட்டி, முத்தழகுப்பட்டி, கலெக்டர் அலுவலகம் அருகே பாலக்கோட்டை ஆகிய இடங்களில் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர்.
ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய அவர்கள், தலையிலும், நெஞ்சிலும் அடித்து ஒப்பாரி வைத்தனர். ‘அம்மா... அம்மா...’ என கண்ணீர்விட்டு கதறினர். முத்தழகுப்பட்டியில் நடந்த மவுன ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். அங்கு அ.தி.மு.க. தொண்டர்கள் சிலர் மொட்டை அடித்துக்கொண்டனர்.
பழனி அருகே பாலசமுத்திரம், தட்டாண்குளம், குரும்பபட்டி, குபேரபட்டினம் உள்ளிட்ட இடங்களில் ஜெயலலிதாவின் படம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அனைத்து கட்சி சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் பழனி அடிவாரம் தேவர் சிலையில் தொடங்கி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று தேரடிதிடலில் நிறைவடைந்தது.
வத்தலக்குண்டு பெத்தானியபுரத்தில், அ.தி.மு.க. நிர்வாகி முத்தையா தலைமையில் நடந்த மவுன ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக சென்று பஸ்நிலையம் வந்தது. பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வேடசந்தூரில் அனைத்து கட்சி சார்பில் நடந்த மவுன ஊர்வலம், வேடசந்தூர்– வடமதுரை ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு தொடங்கியது. பிறகு, பஸ் நிலையம், குடகனாறு பாலம், ஆத்துமேடு, மார்க்கெட்ரோடு, கடைவீதி வழியாக மீண்டும் பஸ் நிலையத்தை வந்தடைந்தது. இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அனைத்துக்கட்சி நிர்வாகிகள், கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் கலந்து கொண்டனர்.
வரப்பட்டி, வெள்ளையம்பட்டி. லட்சுமணம்பட்டி, மாரம்பாடி உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் அ.தி.மு.க. தொண்டர்கள் மொட்டை அடித்து, ஜெயலலிதா உருவப்பொம்மையை ஊர்வலமாக எடுத்துச்சென்று மயானத்தில் அடக்கம் செய்து அஞ்சலி செலுத்தினர். இதே போல மாவட்டம் முழுவதும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நத்தத்தில் ஒன்றிய, நகர அ.தி.மு.க சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. பஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்திற்கு நகர செயலாளர் ஷேக் தாவூதி தலைமை தாங்கினார். இந்த ஊர்வலம் மூன்றுலாந்தர், அவுட்டர், மாரியம்மன்கோவில் தெரு, பெரிய கடை வீதி நல்லாக்குளம் வழியாக மீண்டும் பஸ்நிலையத்தை வந்தடைந்தது. முன்னதாக பஸ்நிலையத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
