ஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையின் போது, தேயிலை தூள் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 31 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்த ஓட்டுநர்கள் உட்பட 5 பேர் கைது.

ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலை நசியனூர் பெரிய வாய்க்கால் அருகில் மதுவிலக்கு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது கோவை நோக்கி தேயிலை தூள் ஏற்றி வந்த அசோக் லேலண்ட் கண்டெய்னர் லாரி TN28 BL 3669 என்ற வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி தீவிர சோதனை மேற்கொண்டனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வாகனத்தின் கண்டெய்னரில் தேயிலை தூள் லோடுக்குள் 31 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை மறைத்து கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை கடத்தி வந்த லாரியின் ஓட்டுநர்களான மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாலுதேவன்பட்டியை சேர்ந்த விநாயகம் (54) மற்றும் விருதுநகர் மாவட்டம் சுக்குவார்பட்டியை சேர்ந்த தங்கபாண்டி, லாரியில் பயணம் செய்து வந்த மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த பிரசன்னா (37) போதுராஜா (28) ஆகியோரை நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பிரசன்னா, போதுராஜா ஆகியோர் ஒடிசா மாநிலம் பிரகம்பூர் என்ற ஊரில் விற்பனைக்காக கஞ்சாவை கொள்முதல் செய்து தேயிலை தூள் லோடு கண்டெய்னர் லாரியில் மறைத்து கடத்தி வந்து திண்டுக்கல் மாவட்டம் காலாடிப்பட்டி ஊரைச் சேர்ந்த ராஜ்குமார் (32) என்பருடன் சேர்ந்து விற்பனை செய்து வருவதாக எடுத்து வந்தது என தெரியவந்தது. அதன் அடிப்படையில், தனிப்படையினர் ஐந்து பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.