அதிமுகவில் எனக்கு பதவி தருவதாக ஈபிஎஸ்-ம், ஓபிஎஸ்-ம் சொல்லியிருக்காங்க - நடிகை லதா பேட்டி...
ஈரோடு
எனக்கு அதிமுகவில் பதவி தருவதாக ஈபிஎஸ்-ம், ஓபிஎஸ்-ம் தெரிவித்துள்ளனர் என்று ஈரோட்டில் நடிகை லதா தெரிவித்தார்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் மூலம் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் நடிகை லதா. 45 வருடங்களில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தற்போது தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார்.
இவர் ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், "எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது நிதி பற்றாக்குறையால் கஷ்டப்பட்டார். அப்போது ஈரோடு, தேனி, திருப்பூர் மற்றும் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நாட்டிய நாடகம் நடத்தினார்.
அதில் நானும் கலந்து கொண்டேன். இதனால், 35 இலட்சம் நிதி திரட்டப்பட்டுதான் 1977-ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்தது அதிமுக. அதில் வெற்றியும் பெற்றது. எனவே, அதிமுகவின் எனக்கும் பங்கு உண்டு என்பதை நினைத்து பெருமை அடைகிறேன்.
இரட்டை இலை சின்னம் வைத்திருக்கும் அதிமுகவில் தான் நான் இருக்கிறேன். பாராளுமன்ற தேர்தலுக்குள் எனக்கு அதிமுகவில் பதவி தருவதாக ஈபிஎஸ்-ம், ஓபிஎஸ்-ம் தெரிவித்துள்ளனர். அப்படி எனக்கு பதவி கிடைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்.
ரஜினியும், கமலும் அரசியலில் ஈடுபடுவதை வரவேற்கிறேன். அவர்களின் செயல்பாடுகளை வைத்தே அவர்களை ஏற்றுக் கொள்வது குறித்து மக்கள் முடிவெடுப்பர்" என்று அவர் கூறினார்.