திருப்புவனம்,

மதுரையில் இருந்து இராமேசுவரம் செல்லும், இராமேசுவரம் பயணிகள் இரயில் எஞ்சின் கோளாறால் திருப்புவனத்தில் பாதிலேயே நின்றது. மாற்று எஞ்சின் கொண்டுவரப்பட்டு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் பயணத்தைத் தொடங்கியது.

மதுரையில் இருந்து சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை வழியாக இராமேசுவரத்திற்கு தினமும் இயக்கப்பட்டு வருகிறது பயணிகள் இரயில். இதில் வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல் இராமேசுவரம் பயணிகள் இரயில் மதுரையில் இருந்து புறப்பட்டது.

அங்கிருந்து சரியாக காலை 7 மணிக்கு அந்த இரயில், திருப்புவனம் இரயில் நிலையம் வந்தது. திருப்புவனத்தில் பயணிகளை ஏற்றிவிட்டு அந்த இரயில் புறப்பட தயாரானபோது, இயந்திரக் கோளாறு ஏற்பட்டு இரயில் நின்றது.

எஞ்சின் ஓட்டுநர்கள் எவ்வளவோ முயற்சித்தும் எஞ்சின் பழுதை சரிசெய்ய முடியாமல் திணறினர். இதனால் எஞ்சின் ஓட்டுநர்கள் இதுகுறித்து மதுரையில் இரயில்வே கோட்ட எஞ்சினீயர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால், அவர்கள் வந்து என்ஜினை பார்வையிட்டு, பழுதை சரிசெய்ய நேரமாகும் என்பதால் மாற்று எஞ்சினுக்கு ஏற்பாடு செய்தனர்.

இதனையடுத்து மதுரையில் மாற்று எஞ்சின் வரவழைக்கப்பட்டு, அதன்பின்னர் சுமார் 2 மணி நேரம் தாமதமாக காலை 9 மணி அளவில் இராமேசுவரம் பயணிகள் இரயில் புறப்பட்டது.

இரயில் புறப்படுவதில் ஏற்பட்ட தாமதத்தால் அரசு வேலைக்கு செல்வோர், வியாபாரிகள், இராமேசுவரம் செல்லும் அடியார்கள் என ஏராளமான பயணிகள் அவதியடைந்தனர். எதிர்பாராமல் நடந்த இந்த எஞ்சின் கோளாறை புரிந்துக் கொண்ட மக்கள் அமைதி காத்தனர். சிலர் காலதாமதத்தை நினைத்து வருந்தினர். இருப்பினும், எல்லாம் நன்மைக்கே என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.