Enforcement Directorate officials on attached 177 kilo gold crore PWD contractor Sekar Reddy

சேகர் ரெட்டியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 177 கிலோ தங்கத்தில் 30 கிலோ தங்கக்கட்டிகளை முடக்கி வைப்பதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் சேகர்ரெட்டியின் வீட்டில் இருந்து 147 கோடி ரூபாய் பணமும், 177 கிலோ தங்கமும் பறிமுதல்செய்யப்பட்டது. அதில், 10 கோடி ரூபாய்க்கும் மேல் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளும் பிடிபட்டன.

இதையடுத்து சேகர் ரெட்டியும், அவரது கூட்டாளிகளான பிரேம்குமார், சீனிவாசலு, திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரை சிபிஐ கைது செய்தது.

தொடர்ந்து சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய மூவருக்கும் கடந்த மார்ச் 17ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்தனர்.

திடீரென சேகர் ரெட்டியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. 10 மணிநேர விசாரணைக்கு பின்னர் சேகர் ரெட்டியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

மேலும், சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் சேகர் ரெட்டியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 177 கிலோ தங்கத்தில் 30 கிலோ தங்கத்தை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது.