சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்த மின்சார ரயில் நடைமேடையில் ஏறி விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்த மின்சார ரயில் நடைமேடையில் ஏறி விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை கடற்கரை நிலையம் அருகே உள்ள ரயில்வே பணிமனையில் இருந்து பராமரிப்பு பணி முடிந்து, மின்சார ரயில் ஒன்று, கடற்கரை ரயில் நிலையத்திற்கு பயணிகள் இன்றி காலியாக நேற்று மாலை புறப்பட்டது. இந்த ரயில், கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்பட இருந்தது. இதனிடையே பணிமனையிலிருந்து 20 கி.மீ வேகத்தில் வந்துக்கொண்டிருந்த மின்சார இரயில், முதலாவது நடைமேடை நிறுத்தத்திற்கு சரியாக 4.25 மணியளவில் நெருங்கிய போது, ரயில் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
இரயில் பிரேக் பிடிக்காததால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், விபத்து ஏற்படும் என்பதால் இரயிலிருந்து குதித்தார். அடுத்த சில நொடியில் இரயில் தடம்புரண்டு எதிரே இருந்த நடைமேடையின் மீது ஏறி, கட்டிடம் மீதி மோதி நின்றது. இதனையடுத்து அங்கிருந்த மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இரயில்வே பாதுகாப்பு படையினர்,தமிழக இரயில்வே போலீசார், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், முதலாவது நடைமேடையிலிருந்து இயக்கப்படும் அனைத்து இரயில்களில், மற்ற நடைமேடையிலிருந்து இயக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. விபத்துக்குள்ளான இரயிலிருந்து சேதமடைந்த என்ஜின் பெட்டி உள்ளிட்ட இரண்டு பெட்டிகளை தவிர அனைத்து பயணிகள் பெட்டிகளும் பிரித்து எடுக்கப்பட்டன. தொடர்ந்து, விபத்தில் சேதமடைந்த பெட்டிகள், 10 மணி நேர போராட்டதிற்கு பிறகு மீட்கப்பட்டன.
இந்த விபத்தில் இரயில் என்ஜின் பெட்டியும், அதனையடுத்த இரண்டு இரயில் பெட்டியும் சேதமடைந்தன. மேலும் நடைமேடையில் இருந்த 2 கடைகள் சேதமடைந்தன. இதனையடுத்து, இரயில் ஓட்டுநர் பவித்ரனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் பிரேக் பிடிக்காததால் விபத்து நிகழ்ந்ததாக ஓட்டுநர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஏனினும் நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் குறைவாக பயணிகள் நடைமேடையில் இருந்ததால், உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரயில் விபத்திற்கு ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய தண்டனை பிரிவு 279, ரயில்வே சட்டப்பிரிவு 151, 154 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மற்ற நடைமேடையில் இருந்து இரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுகிறது.
