டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலித்த பொறியியல் மாணவர்கள்– ஆச்சரியத்தில் உசிலம்பட்டி மக்கள்...!!!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மொய் பணம் வசூலிக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக ஊர்களில் ஏதேனும் விழா நிகழ்ச்சி நடைபெற்றால் மொய் பணம் என வசூலிப்பார்கள். அதில் விழா பந்தல் அமைத்து நுழைவாயிலில் மொய் நோட்டுடன் சிலர் அமர்ந்திருப்பார்கள்.
விழாவிற்கு வருபவர்கள் நேராக முதலில் வந்து மொய்யை வைத்துவிட்டு பிறகு விருந்து உண்ண செல்வர்கள்.
அவ்வாறு மொய் வைக்கும்போது மொய் வைப்பவர் பெயர் மற்றும் அவரது தகப்பனார் பெயர், ஊர், மொய் தொகை ஆகியற்றை நோட்டில் எழுதி வசூலிப்பது வழக்கம்.
இதில் வரும் மொய் பணம் பெரும்பாலும் பணப்பெட்டிக்கு செல்லாமல் பாக்கெட்டிற்கும் செல்வதுண்டு.
இந்த குழப்பங்களை தீர்க்க உசிலம்பட்டியை சேர்ந்த பொறியியல் மாணவர்கள் இ-மொய் என்ற புதிய மென்பொருளை உருவாக்கி மொய் பணம் வசூலிக்கும் முறையை அறிமுகபடுத்தியுள்ளனர்.
மொய் வைப்பவர்கள் பெயர், தொகை, ஊர் மற்றும் செல்பேசி எண் ஆகியவற்றை இந்த ஈ-மொய் மென்பொருளில் பதிவு செய்தவுடன் மொய் வைத்தவர்கள் பெயர், ஊர், தொகை ஆகியவை செல்பேசிக்கு குறுஞ்செய்தியாக வருகிறது.
மேலும் இந்த விவரங்கள் குறித்து அச்சிடப்பட்ட ரசீதும் கொடுக்கப்படுகிறது. மொய் வைப்பவர்கள் விபரம் குறித்து சிடியும் தரப்படுகிறது.