பணி நிரந்தரம் செய்ய கோரி 70 அடி உயர மின் கோபுரத்தின் மீது ஏறி மின்வாரிய ஒப்பந்த ஊழியர் போராட்டம்...
திருப்பூர்
பணி நிரந்தரம் செய்யாமல் தன்னை இழுத்தடித்ததால் மன உளைச்சல் அடைந்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர் 70 அடி உயர உயரழுத்த மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருப்பூர் மாவட்டம், செட்டிபாளையம் தாராபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் (49). இவர் பிரிட்ஜ் வே காலனியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக கடந்த 19 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.
ராஜகோபால் தன்னை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளார். ஆனால், அவர் இதுவரை பணி நிரந்தம் செய்யப்படாமல் இழுத்த்தடிக்கப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் மன உளைச்சல் அடைந்த ராஜகோபால் திருப்பூர் எஸ்.வி. காலனி பிரதான சாலையில் உள்ள சுமார் 70 அடி உயரம் கொண்ட உயர் அழுத்த மின் கோபுரத்தின் மீது நேற்று மாலை ஏறினார்.
இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் மின் வாரிய ஊழியர் பராமரிப்பு பணி மேற்கொள்ள கோபுரத்தில் ஏறுகிறார் என்று நினைத்தனர். ஆனால், கோபுரத்தின் உச்சிக்கு சென்றபின் ராஜகோபால் திடீரென தன்னை "பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் உடனே இதுகுறித்து சமூக ஆர்வலர் குணசேகரன் மற்றும் மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கும், காவலாளர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய வீரர்கள், வடக்கு காவல் ஆய்வாளர் பிச்சையா மற்றும் காவலாளர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜகோபாலிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சுமார் 45 நிமிட போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் உயர் மின் அழுத்த கோபுரம் மீது ஏற முயன்றனர். உடனே ராஜகோபால் மேல் இருந்து கீழே இறங்கி வந்தார்.
அதனைத் தொடர்ந்து வடக்கு காவலாளர்கள் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.