மின்சாரம் பாய்ந்து அந்தரத்தில் தொங்கிய ஊழியர்...!
சென்னை பள்ளிக்கரணை அருகே மின்கம்பத்தின் மீது ஏறி பழுது சீரமைப்பு பணியில் ஈடுபட்டபோது, மின்சாரம் பாய்ந்ததால் ஊழியர் அந்தரத்தில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை பள்ளிக்கரணை அருகே மின்கம்பத்தின் மீது ஏறி பழுது சீரமைப்பு பணியில் ஈடுபட்டபோது, மின்சாரம் பாய்ந்ததால் ஊழியர் அந்தரத்தில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அடையாறு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (30). இவர் மடிப்பாக்கத்தில் உள்ள மின் வாரியத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று பிற்பகல் சீனிவாசன், மடிப்பாக்கம் மேடவாக்கம் சாலையில் உள்ள ஒரு மின் கம்பத்தின் மீது ஏறி இடுப்பில் கயிறு கட்டிக்கொண்டு மின் கம்பிகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென மின்சாரம் பாய்ந்ததால் பிடியை விட்ட சீனிவாசன் மயங்கிய நிலையில் அந்தரத்தில் தொங்கினார். இதனை அறிந்த சக ஊழியர்கள் அதிச்சியடைந்தனர். பின்னர், உடனடியாக மின்சாரத்தை தடை செய்தனர். அந்த வழியாக வந்த டேங்கர் லாரியை மடக்கி நிறுத்தி அதன் மீது ஏறி மயங்கிய நிலையில் தொங்கிக் கொண்டிருந்த சீனிவாசன் இடுப்பில் இருந்த கயிற்றை அறுத்து கீழே கொண்டு வந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து மடிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.