மின்சாரத்துறையின் அலட்சியம்.. இறந்துபோன சிறுமிகள்..! மக்கள் ஆதங்கம்..!
சென்னை கொடுங்கையூரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து 2 சிறுமிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மின்சாரத்துறையும் தீவிரமாக செயல்படுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகரில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்து இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.
கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் பகுதியில் கனமழை காரணமாக மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. ஆனால் மின்வாரிய ஊழியர்கள் அதை அகற்றவில்லை. இதையடுத்து இன்று காலை வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகள், அந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.
மின்வாரிய ஊழியர்களின் அலட்சியமே சிறுமிகளின் உயிரிழப்புக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மின்வாரிய ஊழியர்களின் அலட்சியம் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் போலீசாரிடம் குமுறுகின்றனர். சிறுமிகள் உயிரிழப்பு தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமிகளின் உயிரிழப்பு கொடுங்கையூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.