ஆர்.கே.நகர் வாசிகளின் கனவை கலைத்த தேர்தல் ஆணையம்...
ஆர்.கே.நகர் தொகுதியில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கிய தினகரன் அணி, வாக்காளர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்கியது.
இதையடுத்து, அவருக்கு நெருக்கமான அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும், வணிக நிறுவனங்களில் நடத்திய அதிரடி சோதனையில் பல முக்கிய ஆவணங்களை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றினர்.
அதில், பணம் வழங்குவது தொடர்பான விவரங்களும், அதோடு தொடர்புடைய முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனால், அமைச்சர் விஜயபாஸ்கர் வருமான வரி துறையின். விசாரணை வளையத்தில் சிக்கி உழன்று வருகிறார். மற்ற அமைச்சர்களும் விசாரணையில் சிக்க உள்ளனர்.
எனினும், அதைப்பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலை படாமல், எப்படியாவது ஜெயிக்க வேண்டும், என்ற எண்ணத்தில் இருந்த தினகரன், ஆர்.கே.நகரில், வாக்காளர்களுக்கு மீண்டும் தலா 4 ஆயிரம் ரூபாய் வீதம் கொடுக்க தினகரன் அணியினர் திட்டமிட்டிருந்த நிலையில், ஏற்கனவே ஓட்டுக்கு 4 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸாக பெற்றவர்களுக்கு, தற்போது மீண்டும் 4 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்ற கனவில் மிதந்து கொண்டிருந்தனர் ஆர். கே. நகர் வாசிகள். ஆனால் தேர்தல் ஆணையமோ நேற்று நள்ளிரவில் அவர்களின் கனவை கலைத்து விட்டது.