கல்வி, வேலைகளில் சிறுபான்மையினரின் இட ஒதுக்கீடு எந்த அளவு அமல்படுத்தப்பட்டுள்ளது? வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்…
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளின் சிறுபான்மை மக்களுக்கான இட ஒதுக்கீடு எந்த அளவிற்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு இரண்டாவது மாவட்ட மாநாடு திருவாரூரில் நேற்று நடைப்பெற்றது.
இந்த மாநாட்டிற்கு மாவட்ட அமைப்பாளர் ராமசாமி தலைமை வகித்தார். இதில் மாநில அமைப்பாளர் நூர்முகமது, மாநில துணை அமைப்பாளர் லெட்சுமணன் ஆகியோர் பேசினர். மாவட்ட துணை அமைப்பாளர் அக்பர்தீன் வரவேற்றார்.
இம்மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவை, “திருவாரூர் மாவட்டத்தில் மும்மத தலங்கள் அமைந்துள்ளதால் அடியார்கள், சுற்றுலா பயணிகள் வசதிக்காக சுற்றுலா மினி பேருந்துகளை இயக்க வேண்டும்.
சிறுபான்மை இன மக்களின் குறைகளை தீர்க்க மாவட்ட அளவிலான குறைதீர்க்கும் கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் மத நல்லிணக்க குழுவை நிரந்தரமாக அமைக்க வேண்டும்.
திருவாரூர் மாவட்டத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளின் சிறுபான்மை மக்களுக்கான இட ஒதுக்கீடு எந்த அளவிற்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பைரவநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நாகராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.