மண்ணை தூவி சாபம் மட்டும்தாம் விடல - கட்டண உயர்வுக்கு அவ்வளவு எதிர்ப்பை சம்பாதித்த எடப்பாடி அரசு...
திருவள்ளூர்
பேருந்துக் கட்டணம் உயர்வுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து இன்னமும் கண்டனங்கள், போராட்டங்கள் நடந்துவரும் வேளையில் திருத்தணியில் கல்லூரி மாணவர்கள், வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எளிய மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் விதமாக தமிழக அரசு பேருந்து கட்டணத்தை கடுமையாக உயர்த்தியது. அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள், மாணவ, மாணவிகளின் போராட்டத்திற்கு பிறகு கனத்த இதயத்தோடு பேருந்து கட்டணத்தை குறைக்கிறேன் என்று பைசா கணக்கில் குறைத்து மக்கள் ஏமாளி ஆக்கியது.
அமைச்சர்களுக்கு லட்சக்கணக்கில் கொடுத்த சம்பளம் எதற்கு? போக்குவரத்து கழகம் நட்டத்தில் இயங்கும்போது இந்த ஊதிய உயர்வு தேவையா? மானியத்தில் ஸ்கூட்டர், இலவச பொருட்கள் நாங்கள் கேட்டோமா? எங்களுக்கு தேவையானதை தராமல், உங்கள் இஷ்டத்திற்கு திணிக்க வேண்டாம்" போன்ற கேள்விகளும், சாடல்களும் பேருந்தில் பயணம் செய்யும்போது மக்கள் புலம்புவதை நீங்களே கூட கேட்டிருப்பீர்கள்.
மண்ணை தூவி சாபம் மட்டும்தாம் விடல; அந்த அளவுக்கு மக்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டது இந்த அரசு.
முழுமையாக கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்று பல்வேறு இடங்களில் இன்னமும் போராட்டங்கள் தொடர்கிறது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசினர் கலைக் கல்லூரியில் பேருந்துக் கட்டணம் உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இந்தப் போராட்டத்தில், "பேருந்துக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்திவிட்டு கண்துடைப்புக்காக, ஒரு கி.மீ.க்கு 5 பைசா வீதம் கட்டணக் குறைப்பு செய்ததை ஏற்க முடியாது.
கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டும். அல்லது மேலும் குறைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.