எல்லையில் பலியான தமிழக வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி - முதல்வர் எடப்பாடி அறிவிப்பு
ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் உயிர் இழந்தார். அவரது குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.20 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நேற்று பயங்கர தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில், தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், தேப்பனந்தல் கிராமத்தை சேர்ந்த கோபால் என்பவரது மகன் ராணுவ வீரர் மணிவண்ணன் வீர மரணம் அடைந்தார்.
இந்திய நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் மரணம் அடைந்ததை அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் மணிவண்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மணிவண்ணனின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்’
இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.