இரயில் படிக்கட்டில் பயணம் செய்த மின்வாரிய ஊழியர் தவறி விழுந்து பலி; உறவினர் வீட்டுக்கு போகும் வழியில் சோகம்...
விழுப்புரம்
விழுப்புரத்தில் ஓடும் இரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்துகொண்டிருந்த மின்வாரிய ஊழியர் கீழே தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு (32). இவர் திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையில் தங்கி, அங்குள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
சுரேஷ்பாபு காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டுக்கு செல்வதற்காக நேற்று அதிகாலை உடுமலைபேட்டையில் இருந்து பேருந்து மூலம் திண்டுக்கல் வந்தார்.
பின்னர் அவர், திண்டுக்கல் இரயில் நிலையத்தில் இருந்து பொதிகை விரைவு இரயில் மூலம் செங்கல்பட்டுக்கு புறப்பட்டார். இரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சுரேஷ்பாபு படிக்கட்டில் அமர்ந்தபடி பயணம் செய்து கொண்டிருந்தார்.
விழுப்புரம் அடுத்த கண்டம்பாக்கம் என்ற இடத்தில் இரயில் சென்று கொண்டிருந்தபோது, சுரேஷ்பாபு எதிர்பாராதவிதமாக படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த சுரேஷ்பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் இரயில்வே இருப்புப்பாதை காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தஜ்னர்.
பின்னர், ஓடும் இரயிலில் இருந்து தவறி விழுந்து பலியான சுரேஷ்பாபுவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் இரயில்வே காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.