வேன் கதவில் துப்பட்டா சிக்கி பெண் இறப்பு; வண்டியை சட்டென்று கிளப்பியதால் விபரீதம்...
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் வேன் கதவில் பெண்ணின் துப்பட்டா சிக்கிக் கொண்டதை பார்க்காமல் வண்டியை சட்டென்று எடுத்ததால் அந்த பெண் நிலைதடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலம், நெய்யாற்றின் கரையை அடுத்த உதயன்குளங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ரவி(45). இவர் காரோடு பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மஞ்சு(40). இவர் கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையைச் சேர்ந்தவர். இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் மஞ்சு, திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். பின்னர், தனது தாயார் வீட்டிற்கு செல்வதற்காக களியல் சந்திப்பில் இருந்து வேனில் குழித்துறைக்கு சென்றார்.
குழித்துறை நீதிமன்ற சந்திப்பை அடுத்துள்ள பெற்றோர் வீட்டின் அருகே வேனில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் அணிந்திருந்த துப்பட்டா வேன் கதவில் சிக்கிக் கொண்டது.
சுதாரித்துக் கொண்ட மஞ்சு, துப்பட்டாவை இழுத்து பிடிப்பதற்குள் வேன் சட்டென்று கிளம்பியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மஞ்சு, தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மஞ்சு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து களியக்காவிளை காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.