மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் தனது வாகனம் பறிக்கப்பட்டதால் நடந்தே அலுவலகம் சென்றதாகக் கூறினார். அமைச்சர் பாதுகாப்புப் பணிக்காக வாகனம் எடுக்கப்பட்டதாகவும், உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டினார்.
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாக பணிபுரிந்து வருபவர் சுந்தரேசன். இவர் வீட்டில் இருந்து தனது அலுவலகத்திற்கு காரில் செல்லாமல் நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து டிஎஸ்பி சுந்தரேசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: நான் 1996 பேட்ச் அதிகாரி. 30 ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றி வருகிறேன். என்னுடைய பணியில் அதிகாரிகளிடம் நல்ல மதிப்பை பெற்றிருக்கிறேன். பல முக்கிய வழக்குகளை நான் விசாரித்திருக்கிறேன்.
குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி காவல்நிலையத்தில் பணியாற்றிய போது, கஸ்தூரி என்ற முன்னாள் காவல்துறை அதிகாரி மரண வழக்கை விசாரித்து, இதில் போலீஸ் சித்ரவதை உண்டு. சில போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று மனித உரிமை ஆணைய மாநில தலைவருக்கு அறிக்கை அனுப்பினேன். இந்த அறிக்கையை அவர் அரசுக்கு அனுப்பினார். உடனடியாக மயிலாடுதுறைக்கு என்னை பணியிட மாற்றம் செய்தார்கள். இன்று மாவட்ட கண்காணிப்பாளர் ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார். வாகனம் என்னிடம் இருந்து பறிக்கப்படவில்லை என்றும் தவறான தகவல்களை போட வேண்டாம் என்றும் சொல்கிறார். இதெல்லாம் வேதனையாக இருக்கிறது.
கடந்த 5-ம் தேதி அமைச்சர் மெய்யநாதனின் பாதுகாப்பு பணிக்காக எனது வாகனத்தை மாவட்ட காவல் துறை தரப்பில் கேட்டார்கள். ஆனால் ப்ரோட்டோகால்படி வண்டியை கொடுக்க முடியாது. அப்படி வேண்டும் என்றால் எழுத்துப்பூர்வமாக உத்தரவு போடுங்கள் நான் கொடுக்கிறேன் என்றேன். எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பித்தால் வாகனத்தை வழங்குவதாக தெரிவித்தேன். அதன்பிறகு 2 மணி நேரம் கழித்து 2008 பேட்ச்சில் வந்த
எஸ்.பி இன்ஸ்பெக்டர், 1996ல் பேட்சில் வந்த என்னிடம், நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருந்துகொண்டு வண்டியை மட்டும் அனுப்புங்கள் என்றார். அவரிடமும் மேல் அதிகாரிகள் உத்தரவு இல்லாமல் என்னால் அனுப்ப முடியாது என்று சொல்லிவிட்டேன். அடுத்த 10 நிமிடத்தில் கண்ட்ரோல் ரூமில் இருந்து திருச்செந்தூருக்கு பாதுகாப்பு பணிக்காக செல்லுமாறு கூறினார். இதனால் முருகன் கூப்பிடுகிறார் என்று நினைத்துக்கொண்டு, எந்த வாகனத்திலேயே திருச்செந்தூர் சென்றேன். பின்னர், முதல்வர் வருகை பாதுகாப்புக்காக திருவாரூருக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து திருவாரூருக்கு சென்றுவிட்டு 10ம் தேதி வீட்டுக்கு வந்து இறங்கக்கூட இல்லை. அமைச்சர் பாதுகாப்பு பணிக்கு எனது வாகனத்தை தருமாறு மீண்டும் கேட்டனர். அந்த வாகனம் அவ்வப்போது பழுதாவதாக கூறியதையும் கேட்காமல் வாகனத்தை வாங்கிக் கொண்டனர். இதுவரை அந்த வாகனத்தை திரும்ப வழங்கவில்லை. இதனால் 2 நாட்களாக அலுவலகத்துக்கு நடந்தே சென்றேன். நான் பொறுப்பேற்றது முதல் சாராயம், புதுச்சேரி மது விற்பனையை கட்டுக்குள் கொண்டு வந்ததால், சிலரது வருமானம் பாதிக்கப்பட்டுவிட்டது. இது தொடர்பாக என்னை அழைத்துப் பேசிய உயரதிகாரி, வளைந்து கொடுத்து போகாவிட்டால், விரலை உடைத்துவிடுவார்கள் என்று கூறினார். நான் நேர்மையாக இருப்பதால் பல்வேறு சிக்கல்களை அனுபவிக்கிறேன்.
இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர், மணல் கொள்ளை மற்றும் குற்றவாளிகளிடம் பணம் பறிக்கிறார். அவர் ஒரு நேர்மையற்ற அதிகாரி. அவர் தவறான தகவலை எஸ்.பி.,க்கு சொல்கிறார். மக்களிடம் விசாரித்துக் கொள்ளுங்கள். எஸ்.பி., பாலசந்தர் போன்ற அதிகாரிகள் இருக்கும் வரை பொது மக்களுக்கே பாதுகாப்பு இல்லை. இந்த அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும். நான் சஸ்பெண்ட ஆனாலும் கவலைப்படவில்லை. இதற்கு பின்னர் இரண்டு உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் உளவுத்துறை ஐஜி செந்தில் வேல், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் தான் என்று பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு மாவட்ட எஸ்.பி. மறுப்பு தெரிவித்துள்ளார்.
எஸ்.பி. ஸ்டாலின் மறுப்பு
எஸ்.பி. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும்போது: டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனம் பெறப்பட்டதில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. மாவட்ட காவல் துறையில் இருந்து அழுத்தம் தரப்படுவதாக அவர் கூறியதும், வளைந்து போகச் சொன்னதாக கூறியதும் தவறான தகவல். அவ்வாறு எந்த அழுத்தமும் தரப்படவில்லை. வழக்கமான நடைமுறைபடிதான் அவர் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டார் என்றார்.
