Drowning in three days darkness The complaint is a ...

அரியலுர்

அரியலூரில் மின்மாற்றி பழுதானதால் மூன்று நாள்களாக மின்சாரம் விநியோகம் இல்லாமல் இருளில் மூழ்கிய கிராமத்தினர் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ளது விழுப்பணங்குறிச்சி கிராமம். இந்தக் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தின் அருகேவுள்ள உப்பிலியம்மன் கோவில் அருகில் மின்மாற்றி ஒன்றுள்ளது.

இந்த மின்மாற்றி மூலம் விழுப்பணங்குறிச்சி காலனித்தெரு, சுள்ளங்குடி காலனித்தெரு, ஒத்தத்தெரு ஆகியப் பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த மின்மாற்றி பழுதானதால் கடந்த மூன்று நாள்களாக அப்பகுதியில் மின்சாரம் முழுவதும் தடைப்பட்டது.

இதுகுறித்து மின்சார அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று ஏலாக்குறிச்சி - தஞ்சாவூர் சாலையில் மின்மாற்றியை பழுதுநீக்கி மின்சாரம் விநியோகம் செய்ய வேண்டும் என்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஏற்கனவே குறைவாக மின்சாரம் கிடைப்பதால் மின்சாதனப் பொருட்களை இயக்குவதில் பெரும் சிரமம் உள்ளது. தற்போது கடந்த மூன்று நாள்களாக மின்சாரம் முழுவதும் தடைப்பட்டதால் மிகவும் அவதியடைந்து உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து தகவலறிந்த ஏலாக்குறிச்சி மின்சார வாரிய அலுவலக உதவி செயற்பொறியாளர் சேகர், வருவாய் அலுவலர் ஐயப்பன், கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் திருமானூர் காவலாளர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மின்மாற்றி பழுது நீக்கப்படும் எனவும், அதுவரை மாற்று மின்மாற்றியில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதனையேற்று மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.