தீக்காயங்களுடன் துடித்த ஓட்டுனர்! “உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்காமல் வேடிக்கை பார்த்த மக்கள்”
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் சீட் பெல்ட் அணியவில்லை என்று போலீசார் அடித்ததால் ஆத்திரம் அடைந்த கார் ஓட்டுநர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல் லேசாக பற்றி எரிந்துகொண்டிருக்கையில் தீக்காயங்களுடன் கீழே விழுந்த மணிகண்டனை தீயை அணைக்காமல் எல்லோரும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் ஹாலிடே இன் விடுதிக்கு அருகில் கார் ஓட்டுநர் ஒருவரை போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர். அவர் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டவில்லை என்று போலீசார் அவரை பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த கார் ஓட்டுநர் தனக்குத் தானே உடலுக்கு தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனையடுத்து ஆபத்தான நிலையில் ஓட்டுநர் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே தீக்குளித்த கார் ஓட்டுநர் திருநெல்வேலியைச் சேர்ந்த மணிகண்டன் என்றும், தாம்பரத்தில் தங்கி வாடகை கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்துள்ளது. சென்னை தாம்பரம் எஸ்ஆர்பி டூல்ஸ் அருகே இன்று காரில் வந்த போது சீட் பெல்ட் அணியவில்லை என்று போக்குவரத்து காவலர்கள் 4 பேர் மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த மணிகண்டன் காரை சர்வீஸ் ரோட்டில் விட்டுவிட்டு, தனது காரில் வாட்டர் கேனில் வைத்திருந்த இருந்த பெட்ரோலை எடுத்து வந்து தன் உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். தீப்பற்றி அணைக்கப்பட்டு காயங்களுடன் வழியால் துடித்துக் கொண்டிருந்த மணிகண்டனை நீண்டநேரம் ஆகியும் மக்கள் யாரும் தொட்டுத் தூக்கவோ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவோ இல்லை மாறாக அனைவரும் மணிகண்டனை சுற்றி நின்று வெடிக்கப் பார்த்துக் கொண்டே இருந்தனர்.
இதனையடுத்து, சிறுது நேரம் கழித்து மணிகண்டனை கீழ்ப்பாகம் மருத்துவமனையில் அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீக்குளித்து சிகிச்சை பெறும் இளைஞர் மணிகண்டனுக்கு 58% தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஓட்டுநருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளதாக தெரிகிறது.