குடிநீர் தட்டுப்பாட்டை சாதகமாக்கிக் கொண்ட குடிநீர் உற்பத்தியாளர்கள்; கேன் குடிநீர் விலை ரூ.40…
ஈரோடு
தமிழகத்தில் 127 ஆண்டுகளுக்குப் பின் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு பெருமளவு எழுந்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் ஏரி, குளங்கள் வற்றிவிட்டதால் குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது.
ஈரோடு மாவட்டத்திலும் கடுமையான கடும் வறட்சி நிலவுகிறது. இங்கு ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டின் எதிரொலியாக கேன்களில் விற்கப்படும் குடிநீர் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
பருவமழை பொய்த்துவிட்டதால், ஈரோடு மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையும், காவிரி ஆறும் கைவிட்டுவிட்டன. கடும் வறட்சியால் நிலத்தடி நீரும் குறைந்துவிட்டது.
இதனால், கேன் குடிநீர் விற்பனை ஆட்டோ மீட்டர் போல சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், ரூ.30-க்கு விற்கப்பட்டு வந்த 20 லிட்டர் குடிநீர் கேன் தற்போது ரூ.10 வரை விலை உயர்ந்து ரூ. 40-க்கு விற்கப்படுகிறது.
இதுகுறித்து, மக்கள் ஒருவர் கூறியது:
“ரூ.30க்கு விற்று வந்த கேன் குடிநீர் தற்போது ரூ.40-க்கு விற்கிறார்கள். கேட்டால், ஆழ்துளைக் கிணறுகளில் ஆயிரம் அடிக்கு பள்ளம் தோண்டினால் கூட தண்ணீர் வரமாட்டேங்குது. அதனால், டேங்கர் லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி, சுத்திகரித்து விற்பனை செய்கிறோம். அதான் இந்த விலையேற்றம்” என்று சொல்கின்றனர். இருக்கும் குடிநீர் பற்றாக்குறைக்கு நாங்களும் விலை பார்த்துக் கொண்டிருந்தால் தண்ணீருக்கு படாதபாடு படவேண்டி இருக்கும்” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.