லாரி உரிமையாளரை கொன்ற இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - ஐந்தாண்டு வழக்குக்கு அதிரடி தீர்ப்பு...
நாமக்கல்
லாரி உரிமையாளரை கொன்ற வழக்கில் கொலை செய்த இருவருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை குண்டூர்நாடு அருகே உள்ள நத்துக்குழிப்பட்டியைச் சேர்ந்த சின்னுசாமி மகன் ராஜேந்திரன் (40). லாரி உரிமையாளரான இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி நாமகிரிப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே இருந்து மாயமானார்.
இதுகுறித்து அவரது உறவினர் குப்பன் அளித்த புகாரின்பேரில் நாமகிரிப்பேட்டை காவலாளார்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், ராஜேந்திரன் நாமகிரிப்பேட்டையில் இருந்து சிங்களாந்தபுரம் செல்லும் வழியில் உள்ள தனியார் விவசாய தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
சிங்களாந்தபுரத்தை சேர்ந்த திருமூர்த்தி மகன் சுரேஷ் (26), நாமகிரிப்பேட்டையை சேர்ந்த செல்வம் மகன் சுரேஷ்குமார் (26) ஆகியோர் ராஜேந்திரனை கொலை செய்துவிட்டு, அவரது லாரியை கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து அப்போதைய காவல் ஆய்வாளர் ஆரோக்யராஜ் மற்றும் காவலாளர்கள் விசாரணை நடத்தி சுரேஷ், சுரேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு நாமக்கல் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி "குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ், சுரேஷ்குமார் ஆகிய இருவருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனை விதித்ததோடு அதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்" என்று நீதிபதி இளங்கோ உத்தரவிட்டார். மேலும், இருவருக்கும் தலா ரூ.4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதனைய்யடுத்து இருவரையும் கோவை சிறைக்கு அழைத்து செல்ல காவலாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.