Dont increase the tax rate for gold and food - ramdoss advised
தங்கம் மற்றும் உணவுப் பொருட்களுக்கும் அதிக அளவில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பது ஏழை – எளிய மக்களை பாதிக்கும் நடவடிக்கை என பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் நடைபெற்ற சரக்கு மற்றும் சேவை வரிக் குழு கூட்டத்தில் தங்கத்திற்கு 3 விழுக்காடு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதேபோல், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கும் அதிக அளவில் வரி விதிக்கப்பட்டிருப்பது மக்களை பாதிக்கும் நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.
தங்கத்தின் மீது இப்போது சுங்கவரி, மதிப்புக் கூட்டு வரி, கலால் வரி உள்ளிட்ட அனைத்தும் சேர்த்து 12 புள்ளி 4 மூன்று விழுக்காடு மட்டுமே வரி வசூலிக்கப்படுவதாகவும், புதிய வரி விதிப்பு முறையில், இப்போது இருப்பதைவிட 3 புள்ளி இரண்டு 4 விழுக்காடு அதிகமாக வரி வசூலிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலோட்டமாக பார்க்கும் போது இந்த விழுக்காடு குறைவாகத் தெரிந்தாலும், தங்கத்தின் விலையோடு கணக்கிட்டு பார்த்தால் 810 ரூபாய் கூடுதலாக வரி செலுத்த வேண்டியிருக்கும் எனவும், ஒரு பவுன் தங்கத்திற்கு மொத்தமாக 2985 ரூபாய் வரியாக வசூலிக்கப்படுவது நியாயமற்றது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
அளவுக்கு அதிகமான வரி விதிப்பு இந்தியாவுக்குள் தங்கம் கடத்தலை அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு தடைபடும் என தெரிவித்த அவர், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, கலால் வரி ஆகியவற்றை முற்றிலுமாக ரத்து செய்வதுடன், பொருட்கள் மற்றும் சேவை வரியையும் ஒரு விழுக்காடாக குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
உணவுப் பொருட்களுக்கு வரியை அதிகரித்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பீடி, சிகரெட் ஆகியவற்றிற்கு வரியை குறைத்திருப்பது தவறானது எனவும், பீடி, சிகரெட் ஆகியவற்றை மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் அவற்றுக்கு 100 சதவிகிதம் வரி விதிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
