doctor mysterious death
3 நாளில் திருமணம் நடக்க இருந்த வேளையில், டாக்டர் மணமகன் மர்மமாக இறந்தார். கொலையா என போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
சென்னை கொளத்தூர் பூம்புகார் நகர், 2வது பிரதான சாலையை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ராஜேஷ்குமார் (26) என்ற மகனும், ஸ்ரீரேகா என்ற மகளும் உள்ளனர். ராஜேஷ்குமார், டாக்டர் படித்து முடித்துவிட்டு, சென்னை முகப்பேரில் சொந்தமாக கிளினிக் நடத்தி வந்தார்.
கடந்த சில மாதங்களாக ராஜேஷ் குமாருக்கு வரன் பார்த்து வந்தனர். அதன்படி அவருக்கு திருமண நிச்சயம் முடிந்தது. நாளை மறுநாள் (3ம் தேதி) திருமணம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தடல்புடலாக நடந்து வந்தது. இதையொட்டி நண்பர்கள், உறவினர்களுக்கு பத்திரிகை வைத்து கொண்டு இருந்தனர்.
இந்நிலையில், கடந்த 27ம் தேதி நாகராஜ், சாந்தி ஆகியோர் திருமண பத்திரிகை வைப்பதற்காக வெளியே சென்றனர். வீட்டில் ராஜேஷ், ஸ்ரீரேகா ஆகியோர் மட்டும் தனியாக இருந்தனர். இரவு 8 மணியளவில் சாப்பிட்டு முடித்த ராஜேஷ்குமார், நடைபயிற்சி செல்வதற்காக வெளியே சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், ராஜேஷ்குமாரை உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், எந்த தகவலும் இல்லை.
இதுகுறித்து கொளத்தூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ராஜேஷ்குமாரை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை நாகராஜ் வீட்டின் கீழ் 12 அடியில் மட்ட குடிநீர் தொட்டியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது.இதையடுத்து, தொட்டியை திறந்து பார்த்தபோது, ராஜேஷ்குமார் அழுகிய நிலையில், சடலமாக கிடந்ததை கண்டு, குடும்பத்தினர் கதறி அழுதனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து கொளத்தூர் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் மர்மச்சாவு என வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொழில்போட்டியில் ராஜேஷை யாராவது கொலை செய்து, அவரது வீட்டு தொட்டியில் வீசி சென்றார்களா அல்லது வேறு காரணமா என தீவிரமாக விசாரிக்கின்றனர். 2 நாளில் திருமணம் நடக்க இருந்த நிலையில், டாக்டர் மணமகன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
