பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்க கூடாது - தமாகா-வினர் திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம்...
திருவண்ணாமலை
பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கும் நடைமுறையை இரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் தமாகாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகம் அருகே தமிழ் மாநில காங்கிரசு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமாக கட்சியின் மாவட்ட தலைவர் கே.ஆர்.தாமோதரன் தலைமை தாங்கினார். மாவட்டப் பார்வையாளர் கோ.அரிகிருஷ்ணன், நகரத் தலைவர் ஆர்.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, "பெட்ரோல், டீசல் விலையினை ஜி.எஸ்.டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வந்து நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் நடைமுறையை இரத்து செய்ய வேண்டும்.
காவிரி படுகை பாலை நிலமாக மாறும் அபாயத்திலிருந்து காப்பற்ற தவறும் மத்திய அரசை கண்டித்தல்,
தமிழக அரசுக்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை வன்மையாக கண்டித்தல்,
பேருந்துக் கட்டண உயர்வை குறைக்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலை நடத்த விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செண்பகத்தோப்பு அணையில் நீர் வீணாவதை தடுக்க அணையின் மதகை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போளூர் இரயில்வே மேம்பால பணியை உடனடியாக தொடங்க வேண்டும்" உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் த.மா.கா மாநில செயற்குழு உறுப்பினர் தினகரன், வட்டார தலைவர் ராஜவேலு, வந்தவாசி நகரத் தலைவர் டி.கே. செல்வம், ரவி, இளைஞர் அணித் தலைவர் பாரதிராஜா,
மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளந்திரையான், தெய்யார் வெங்கிடேசன், வெம்பாக்கம் ஒதியப்பன் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.