Do not burn tires plastic and rubber products at bogi festival - Karur Collector

கரூர்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

போகிப் பண்டிகையன்று டயர்கள், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் இதர கழிவுப் பொருள்களைக் கொளுத்தக் கூடாது என்று கரூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், "அறுவடை திருநாளை தமிழர்கள் பொங்கல் திருநாளாக தொன்றுதொட்டு கொண்டாடி வருகின்றனர். தை பொங்கலுக்கு முதல் நாளை போகிப் பண்டிகையாக "பழையன கழிதலும், புதியன புகுதலுமாக' கொண்டாடுவது வழக்கம்.

இந்த நாளில் தமிழர்கள் திருமகளை வரவேற்கும் முகமாக தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருள்களையும், தங்கள் வசமுள்ள செயற்கை பொருள்களான டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் இதர தேவை அற்றவைகளையும் எரிக்கும் பழக்கத்தை கையாண்டு வருகின்றனர்.

இத்தகைய செயற்கைப் பொருள்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப்புகைகளான கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடுகள், கந்தக டை ஆக்ஸைடு, டையாக்சின், ப்யூரான் மற்றும் நச்சுத்துகள்கள் ஆகியவற்றால் சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுகிறது.

மேலும் கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவைகளில் எரிச்சலும் ஏற்படுகிறது. ஆஸ்துமா, மூச்சுத் திணறல் மற்றும் இதர உடல் நலக்கேடுகளும் ஏற்படுகிறது. பார்க்கும் திறன் குறைபடுகிறது.

இதுபோன்று காற்றை மாசுபடுத்தும் செயல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986, பிரிவு (15)-ன் படி இது தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே போகிப் பண்டிகையன்று டயர்கள், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் இதர கழிவுப் பொருள்களைக் கொளுத்தாமல் குப்பைகளை முறைப்படி அகற்றி போகித் திருநாளை மாசு இல்லாமலும், மகிழ்ச்சியுடனும் கொண்டாட மக்கள் ஒத்துழைக்க வேண்டும்" என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவித்து இருந்தார்.