டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி ஏன் மௌனம் சாதிக்கிறார் என்று தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். 

தயாநிதி மாறன் விமர்சனம்

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதை பற்றி எடப்பாடி பழனிசாமி ஏன் பேசாமல் இருக்கிறார்? என தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக திமுக எம்.பி. தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: மருதமலை திரைப்படத்தில் கைதியை தப்பவிட்ட வடிவேலுவை பார்த்து அர்ஜுன், என்னென்னமோ பேசுவியே இப்ப பேசுடா... எதாவது பேசுடா என்ற காமெடிதான் இன்றைக்கு நினைவுக்கு வருகிறது. எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து சொல்லி வரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதை பற்றி ஏன் பேசாமல் இருக்கிறார்? டெல்லி எஜமான் கோபித்து கொள்வார் என்ற பயமா? ED தன் வீடு தேடி வந்து விடும் என்ற அச்சமா?

பொய்களையும் அவதூறுகளையும் வைத்தே அரசியல்

அமலாகத்துறை சோதனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மவுனமாக இருப்பது ஏன் எனக் கடந்த 17-ம் தேதி வீராவேசமாகக் கேட்ட சூராதி சூரர் யார்? அந்த சூனா பானாவை கண்டா வரச் சொல்லுங்க… கையோடு கூட்டி வாருங்க. பொய்களையும் அவதூறுகளையும் வைத்தே அரசியல் செய்யும் ’பச்சைப் பொய்’ பழனிசாமி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைக் கண்டு, வெட்கி தலைகுனிய வேண்டும்.

பழனிசாமி பதில் சொல்லுவாரா?

பாஜகவின் அடிமையாக வாழ்ந்து, அதிமுகவை பாஜகவின் கிளைக் கழகமாக மாற்றி, கீழ்த்தரமான அரசியல் செய்து வரும் பழனிசாமியின் அருவருக்கத்தக்கப் பித்தலாட்ட அரசியல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் கிழித்தெறியப்பட்டிருக்கிறது. பழனிசாமி பதில் சொல்லுவாரா... பம்மி கிடப்பாரா? என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.