எங்களுக்கு பாடம் எடுக்க உங்களுக்கு தகுதி இல்லை! கேப்டன் சம்சாரத்தை சகட்டுமேனிக்கு திட்டிய தி.மு.க.
விஜயகாந்துக்கு உடல்நலன் பாதித்த பின்னும் சில வருடங்கள் கட்சி உயிர்ப்போடு இருந்தது. அப்போது பிரேமலதா தனியாக பிரசாரத்துக்கு வந்து தாளித்தெடுப்பார். ஆனால்..
தே.மு.தி.க. அரசியலில் கோலோச்சிய காலகட்டத்தில் தேர்தல் வந்துடுச்சுன்னா போதும் தமிழகம் முழுக்க டூர் கிளம்பிடுவார் கேப்டன் விஜயகாந்த். துவக்கத்தில் அவர் கூடவே வருவார் பிரேமலதா. ஒரு தொகுதிக்கும், இன்னொரு தொகுதிக்கும் இடைப்பட்ட கிராமங்களில் தங்களின் கார்களை நிறுத்தி சாப்பிடுவார்கள். விஜயகாந்துக்கு அவியல், சிக்கன், அப்பளம் என்று பிரேமலதா பரிமாறுவதை போட்டோ எடுத்து போட்டுவிட்டு அதகளம் செய்வார்கள் தே.மு.தி.க.வினர்.
விஜயகாந்துக்கு உடல் நலன் சரியில்லாமல் போன பின்னும் ஒரு சில வருடங்கள் அக்கட்சி உயிர்ப்போடு இருந்தது. அப்போது பிரேமலதா தனியாக பிரசாரத்துக்கு வந்து தாளித்தெடுப்பார்.
ஆனால் கடந்த சில வருடங்களாக முடிந்தே போய்விட்டது தே.மு.தி.க! பிரேமலதாவும், சுதீஷும் எடுத்த மிக தவறான கூட்டணி முடிவுகளால் அக்கட்சி முடிந்தே போய்விட்டது! என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இந்நிலையில், இந்த உள்ளாட்சி தேர்தலில் ஆங்காங்கே தனித்துப் போட்டியிடுகிறது தே.மு.தி.க. இந்த வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் பண்ண வந்த பிரேமலதா “தி.மு.க. ஆட்சிக்கு வந்து, எந்த ஒரு தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. கேட்டால் சிரித்து மழுப்புகின்றனர். முடியும் என்றால் மக்களிடம் சொல்லுங்கள், முடியாது என்றால் முடியாது என்று சொல்லுங்கள். ஏன் குழப்புகிறீர்கள் மக்களை?” என்று பிரசாரத்தில் கேட்டார்.
இதற்கு தங்களின் பிரசாரங்களில் பதிலடி தரும் தி.மு.க.வினர் “குழப்புறதை பத்தியெல்லாம் பேசுற தகுதி தே.மு.தி.க.வுக்கோ, குறிப்பா பிரேமலதாவுக்கோ கிடையவே கிடையாது. கட்சி ஆரம்பிச்ச புதுசுல ‘எந்த காலத்திலும் தெய்வத்தோடும், மக்களோடும்தான் கூட்டணி’ன்னு கூவிட்டு அப்புறம் ஜெயலலிதா கூட கூட்டணி வெச்சது நீங்க செஞ்ச குழப்பமா இல்ல தெளிவா?
கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் சமயங்கள்ள கடைசி நொடி வரைக்கும் எல்லா கட்சிகள் கூடவும் கட்சியை வெச்சு பேரம் பேசிட்டு, எதுல அதிகம் தர்றாங்களோ அவங்களுக்கு கட்சியை கூட்டணியாக விற்கிற முடிவை எடுக்க நீங்க திட்டம் போட்டு, தொண்டனை குழப்புனீங்களே. அந்த பாவங்களுக்கு பரிகாரம்தான் இன்னைக்கு உங்க கட்சி முடிஞ்சே போயி கிடக்கும் பரிதாபம். அதனால எங்களுக்கு வகுப்பெடுக்குற தகுதி உங்களுக்கு என்னைக்குமே இல்லை பிரேமலதா.” என விளாசியுள்ளனர்.