எச்.ராஜாவை உடனே கைது செய்யக் கோரி திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்...
விருதுநகர்
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைது செய்யக் கோரி திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திரிபுராவில் லெனின் சிலை தகர்க்கப் பட்டதற்கும், பெரியார் சிலையை அகற்றுவோம் என்று கூறிய பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைது செய்யக் கோரியும் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம் ஜவஹர் மைதானம் அருகே திராவிடர் கழகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.யான தங்கப்பாண்டியன் பங்கேற்றார்.
இதில், காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ஆதி தமிழர் இயக்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழ் தமிழர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எச்.ராஜாவுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதேபோல சேத்தூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக முன்னாள் எம்.பி.லிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், ஒன்றிய செயலாளர் வீராசாமி, துணை செயலாளர் கணேசமூர்த்தி, ஜெயராம், நகரச் செயலாளர் ராஜா, பட்்டாணி, வரதராசன், வக்கீல் பகத்சிங் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திரிபுராவில் லெனின் சிலையை இடித்து தள்ளியதைக்கண்டித்தும் தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை உடைப்போம் என்று டிவிட்டர் பதிவு வெளியிட்டு, சட்டம் ஒழுங்கை கெடுக்கும் நோக்குடன் மக்களை பிளவுபடுத்திவரும் எச்.ராஜா மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டன.