தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ள கோயம்பேட்டில் கூடுதலாக கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகைக்காக சென்னை கோயம்பேட்டில் இருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களில் இருந்து பிற இடங்களுக்கும் மொத்தம் 21 ஆயிரத்து 289 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில், அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வரும் 26, 27, 28 ஆம் தேதிகளில் வெளியூர் செல்வதற்காக கூடுதலாக டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட்டு, டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வண்ணம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் கூறினார். பொதுமக்களுக்கு தகவல் அளிக்கும் வகையில் ஒலிபெருக்கி, பாதுகாப்பு மையங்கள், ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதேபோன்று தற்காலிக நடைமேடைகள் அமைக்கப்பட்டும், பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.