தமிழ்நாட்டில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று (11.08.2025) முதல் 20.08.2025 வரை நடைபெறும். 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன.

Government colleges M.Ed : எம்.எட் படிப்பு ஆசிரியர்களுக்கு கற்பித்தல் திறன்களை மேம்படுத்தவும், நவீன கற்பித்தல் முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் உதவுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று (11.08.2025) முதல் 20.08.2025 வரை நடைபெறவுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கூறுகையில், தமிழ்நாட்டில் எம்.எட். பாடப்பிரிவுகள் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன. 

மாணவர்களுக்கான சேர்க்கை விண்ணப்பம் இன்று தொடக்கம்

இவ்விடங்களுக்கு 2025-26ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (11.08.2025) முதல் இணையவழியில் தொடங்கும்.மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவினை மேற்கொள்ளலாம். மேற்படி இணையதள முகவரியில் 20.08.2025 வரை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. பின்னர். இதற்கான தரவரிசைப் பட்டியல் 25.08.2025 அன்று வெளியிடப்படும். மாணாக்கர் சேர்க்கை 26.08.2025 முதல் 29.08.2025 வரை நடைபெறும். மேலும், முதலாம் ஆண்டு வகுப்புகள் 01.09.2025 அன்று முதல் துவங்கும் என உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.