டிஜிட்டல் பலகையில் கோளாறு! நானும் தமிழன்தான்! தமிழை நீக்கவில்லை! சென்னை விமான நிலைய இயக்குநர் விளக்கம்
தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி அளிக்கும் வகையில் சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும் தகவல்களில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாக இன்று காலை செய்தி வெளியானது. விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் டிஜிட்டல் அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
விமானங்களின் வருகை, புறப்பாடு குறித்து சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் அறிவிப்பு பலகையில் தமிழ், ஆங்கிலம், இந்திய ஆகிய மூன்று மொழிகளில் அறிவிப்புகள் ஒளிபரப்பப்படுகின்றன.
இனிமேல், ஆங்கிலத்தில் மட்டும்தான் அறிவிப்பு வெளியாகும் என்று சென்னை விமான நிலைய இயக்குநர் கூறியதாக தகவல் பரவியது. விமானங்கள், காலை நேரங்களில் அதிகமாக இயக்கப்படுகின்றன. மூன்று மொழிகளில் அறிவிப்பு வெளியாவதால், தாமதம் ஏற்படுவதாக கூறி தமிழ், இந்தி மொழி அறிவிப்புகள் நீக்கப்படுவதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக செய்திகள் வெளியானதை அடுத்து, பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து விமான நிலைய இயக்குநர் சந்திரமௌலி கூறும்போது, இன்று காலையில் அதிகமான விமானங்கள் இயக்கப்பட்டதால், சென்னை விமான நிலைய பெயர்ப்பலகையில், ஆங்கிலத்தில் மட்டும அறிவிப்பு வெளியானது. மேலும், டிஜிட்டல் அறிவிப்பு பலகையில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாகத்தான் இன்று காலை இந்த பிரச்சனை ஏற்பட்டு விட்டது. தற்போது அது சரிசெய்யப்பட்டு விட்டது என்றார்.
விமான நிலையத்தில் தமிழ் நீக்கப்பட்டது தொடர்வாக வெளியான தகவல் குறித்து, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஒருவர், விமான நிலைய இயக்குநரை தொடர்பு கொண்டு, அறிவிப்பு பலகையில் இருந்து தமிழை ஏன் நீக்கினீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த இயக்குநர் சந்திரமௌலி, நானும் தமிழன்தான்; டிஜிட்டல் பலகையில் இருந்து தமிழை நீக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.