கிரிக்கெட் விளையாட்டில் தகராறு; ஒருவருக்கு கத்திகுத்து: மற்றொருவருக்கு கம்பியால் சரமாரி அடி...
திருவாரூர்
திருவாரூரில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட தகராறில் ஒருவரை கத்தியால் குத்தியும், மற்றொருவரை கம்பியால் அடித்தும் தாக்குதலில் ஈடுபட்ட இருவரை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்துள்ள கீழதிருப்பாலக்குடியைச் சேர்ந்த பிரவீன்குமார் (19), மன்னார்குடியை அடுத்த கண்டிதம்பேட்டையை சேர்ந்த சிலம்பரசன் (20) கீழதிருபாலக்குடியைச் சேர்ந்த ரமேஷ்குமார் (20) ஆகிய மூவரும் நேற்று முன்தினம் கீழதிருப்பாலக்குடியில் கிரிக்கெட் விளையாடினர்.
அப்போது, பிரவீன்குமார் மற்றும் சிலம்பரசன் இடையே தகராறு ஏற்பட்டதில் சிலம்பரசன், பிரவீன் குமாரை சரமாரியாக தாக்கினார்.
இந்த சம்பவம் குறித்து பிரவீன்குமார் தனது அண்ணன் பிரபுதேவாவிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த வழியாக வந்த சிலம்பரசனை, பிரபுதேவா ஏன் எனது தம்பியை அடித்தாய்? என்று கேட்டு அவரை அடித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த சிலம்பரசன், ரமேஷ்குமாரை அழைத்துக் கொண்டு பிரபுதேவா வீட்டுக்கு சென்று அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரபுதேவாவை குத்தியுள்ளனர். அப்போது அதை தடுக்க வந்த பிரபுதேவாவின் மைத்துனர் சிதம்பரத்தை சேர்ந்த வீரபாண்டியனையும் கம்பியால் அடித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இதில் காயமடைந்த பிரபுதேவா, வீரபாண்டியன் ஆகிய இருவரும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர், பிரபுதேவா மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து பரவாக்கோட்டை காவலாளர்கள் வழக்குப்பதிந்து சிலம்பரசன், ரமேஷ்குமார் ஆகிய இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.